சென்னை: ‘தென் மாவட்டங்களில், வரும் 31ம் தேதி ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழக கடலோர மாவட்டங்களில், ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மற்றும் நாளை மறுதினம், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
வரும் 31ம் தேதி, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் ஜன., 1, 2ம் தேதிகளில், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குமரிக்கடல் பகுதிகள், தென் கிழக்கு மற்றும்அதை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடலின் தெற்கு பகுதிகளில், நாளை சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.
வரும் 30, 31ம் தேதிகளில், குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் வீசும். இந்நாட்களில் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.