Connect with us

மதுரை நகரம்

மதுரை போலீசாருக்கு அமலாக்கத்துறை கேள்வி

மதுரை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டது குறித்து டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பிரிஜேஷ் பெனிவால் புகார் செய்த நிலையில் அதுகுறித்த விசாரணைக்கு நேற்றுமுன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வராத நிலையில், நேற்றிரவு வராததற்காக காரணம் குறித்து கடிதம் கொடுத்தனர்.

திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ்பாபுவிடம் சொத்துகுவிப்பு வழக்கு குறித்து மேல்நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி டிச.,1ல் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அன்றே மதுரை அலுவலகத்தில் சோதனையும் செய்தனர். போலீசார் அத்துமீறி நுழைந்ததாக டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பிரிஜேஷ் பெனிவால் புகார் அனுப்பினார்.

இப்புகார் சம்பந்தப்பட்ட தல்லாகுளம் போலீசாருக்கு அனுப்பப்பட்டது. புகார் குறித்து விசாரிக்க நேற்றுமுன்தினம்(டிச.,26) ஆஜராகுமாறு அவருக்கு பதிவு தபாலில் சம்மன் அனுப்பினர். ஆனால் பெனிவால் வரவில்லை.

இந்நிலையில் நேற்றிரவு தல்லாகுளம் ஸ்டேஷனில் அமலாக்கத்துறை அலுவலக உதவி இயக்குநர் அதுல்குப்தா எழுதிய கடிதம் போலீஸ் உதவிகமிஷனர் சம்பத்திற்கு கொடுக்கப்பட்டது.

அதில் தெரிவித்துள்ளதாவது: டிச.,26ல் தாங்கள் அனுப்பிய சம்மன் பெறப்பட்டது.

அதில் எதற்கான விசாரணை என்ற விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

எங்கள் அலுவலகத்தில் சட்டவிரோத சுரங்கம், ஊழல் வழக்குகள், முதலீட்டு மோசடி வழக்குகள், வங்கி மோசடி உள்ளிட்ட பல்வேறு உயர்மட்ட வழக்குகளை பணமோசடி தடுப்புச்சட்டத்தின்கீழ் விசாரித்து வருகிறோம்.

இச்சூழலில் டிச.,1ல் தமிழக லஞ்சஒழிப்பு போலீசார் சட்டவிரோதமாக சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை திருடியுள்ளனர்.

இதுகுறித்து டிச.,2ல் டி.ஜி.பி.,யிடம் புகார் அளித்தோம். லஞ்சஒழிப்பு போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய டிச.,16ல் டி.ஜி.பி.,க்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பினோம். உங்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்.

என்னென்ன விபரங்கள், ஆவணங்கள் தேவை என தெளிவாக குறிப்பிட்டால் அதற்கேற்ப தயாராக வருவோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

More in மதுரை நகரம்

Advertisement
Advertisement
Advertisement
To Top